Search This Blog

Tuesday, November 2, 2010

மழைக்கவிதை

மேகம் அப்பிக் கிடக்கும் இந்தக் காலையில்
நனைந்து கொண்டிருக்கும் காக்கையொன்று தன்
அலகால் கொத்தித் தின்கிறது இந்த மழைத்துளியை.

தனியே குடை பிடித்து நடந்து செல்கிறாள்
சிவந்த ஆப்பிளையொத்த சிறுமியொருத்தி
மேகங்களை  மென்று கொண்டு.

எப்பொழுதும் சோர்ந்து போய் துவண்டு கிடக்கும் இந்த
பெயர் தெரியாத மரம்
அள்ளி அள்ளி முகத்தில் தெளிக்கிறது தனது
பச்சையை.

மழை ருசித்து,
என்னை குடித்துக்கொண்டிருக்கிறது
சூடான இந்த கடுங்காப்பி.

எழுத முயலும் ஏன் விரல்களின் நடுவே நழுவி,
 உருண்டோடும்
அத்தனை வார்த்தைகளும்,
தொப்பலாய் நனைந்து
நடனமாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

சிறிது நேரத்தில் கண்ணாடி சிறையொன்றிற்குள்
அடைபட்டொழியப்போகும்
நான்
எங்கு சென்று தேடுவது
நீ கேட்ட
உனக்கான
மழைக்கவிதையை?

No comments:

Post a Comment