Search This Blog

Saturday, November 13, 2010

நிரந்தர அடிமை

ஒரு நிரந்தர அடிமையாக இருப்பதென்பது 
பேரோவியமென அமைதியாய் அமர்ந்திருக்கும்
இந்த இரவைப் போல
புனிதமானது.

அவன் தனது அடிமைத்தனத்தை 
ஒரு பூங்கொத்தை ஏற்றுக் கொள்வதை போல
புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு சாட்டையடியையும் 
ஒரு மழைத்துளியை பெற்றுக் கொள்வதை போல
பரவசத்துடன் பெற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு வசைச் சொல்லையும் 
அருவியின் சத்தத்தை நிரப்பிக்கொள்வதை போல
தன்னுள் நிரப்பிக் கொண்டான்.
ஏனெனில் 
அவனுக்கு 
முகமூடிகள்
ஒப்பனைகள்
நம்பிக்கைகள்
வரலாற்று  குறிப்புகள்
பயணங்கள்
தத்துவங்கள்
கதைகள்
தேவையற்ற  உரையாடல்கள்
நட்சத்திரங்களை பற்றிய பொய் கனவுகள்
பட்டாம்பூச்சியை பற்றிய வெற்று நினைவுகள்
காலத்தை பற்றிய அபத்த கற்பனைகள்
என எதுவுமே தேவையில்லை.

ஏனெனில் அது 
ஒரு வரம்,
கனவுகளின் பாதாளத்திற்குள் விழுந்திடாமல்
ஒற்றை கயிற்றின் மேல் நடக்கும் 
ஒரு சாகசம்.
ஒரு தவம்.

முடிவற்ற வெளியில் தனித்திருக்கும் 
நட்சத்திரத்தை போல 
அது ஒரு அற்புதம்.

அவன் கண்களை பார்த்ததுண்டா?
அது
சற்றுமுன் இறந்தவனின் நிலை குத்திய கண்களை போல
ஒரு துறவியின்  கண்களை போல,
ஒரு சலனமற்ற நதியில் விழுந்திருக்கும் சூரியனை போல
ஏதுமற்று
எதுவுமே அற்று இருக்கும்.

காலம் வெறுத்து போய் அவனை 
உதைத்து விளையாடும் போதெல்லாம்,
அவன் ஒரு
புத்தனை  போல புன்னகைத்திருப்பான்.

தேவதைகள் அவனை சபிக்கும் போதெல்லாம்
ஆழ்கடலில் தனித்து நடனமாடிக் கொண்டிருக்கும்
மீனின் முகத்தை கொண்டிருப்பான்.

ஏனெனில் பல நேரங்களில் அவன் sisyphus உடன் 
உரையாடிக்கொண்டிருப்பான்.

கண்கள் பிதுங்குமளவு உள்ளிருந்து 
துக்கம் பீறிட்டு வரும் சில பொழுதுகளில் 
பிரபஞ்சமே வெடித்துவிடும் அளவு  
அவன் கதறி அழுகையில் 
பொல பொல வென கொட்டும்  
ஓர் ஆயிரம் நட்சத்திரங்கள்
அவன் கண்களில் இருந்து.
இது போன்ற தருணங்களில் 
அவன் விரல்கள் 
இது போன்ற 
ஒரு கவிதையை
எழுதி கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment