Search This Blog

Tuesday, November 2, 2010

முட்டாள் கேள்வி 2

ஒரு உறவை வரையறுப்பதில்
உனக்கு ஏன்
இவ்வளவு பதற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட மேசை
மறுபடியும் மறுபடியும்
ஒழுங்கமைக்கப்படுகிறது.

கச்சிதமாக  உடுத்திய பின்பும்
உடை திரும்பத் திரும்ப
சரி செய்யப்படுகிறது.

முளைத்திருக்கும் பரு
அவசரமாய்
கிள்ளி எறியப்படுகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று
அழுத்தி அழுத்தி
துடைக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் ஏன்
நினைவுபடுத்திக் கொள்கிறாய்
உனது எல்லைகளை?

ஒரு பறவை மேலெழுந்து
பறப்பதை போல
இந்த நதியின் வெள்ளம்
கரை புரள்வதை போல
நின்று கொண்டிருக்கும் இந்த இரவின்
ஆயிரமாயிரம் கிளைகளை போல,

அது எல்லையற்றதாக இருப்பதில்
நீ ஏன்
இவ்வளவு பயம் கொள்கிறாய்?

பட்டாம்பூச்சி பாட்டிலுக்குள் அடைக்கப்படுகிறது.

ஒரு இலை கிள்ளி எறியப்படுகிறது.

பெருமழையின் போது குடை ஒன்று  விரிக்கப்படுகிறது.

கதவுகள் நிரந்தரமாக  மூடப்படுகின்றன.

ஒரு குழந்தை கொலை செய்யப்படுகிறது.  


நீ வரையறுப்பதும்
என் மேல் செலுத்தப்படும்
தீராத வன்முறை என்று
நீ எப்போது புரிந்து கொள்வாய்?.

No comments:

Post a Comment